காலி – தெவட்ட பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மேஜிக் வித்தையை பயன்படுத்தி பணம் திருடியதாகக் கூறப்படும் பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் தகவலின்படி, இலங்கையின் 5,000 ரூபாய் நாணயத்தாளைப் பார்க்க விருப்பம் இருப்பதாகக் கூறிய சந்தேக நபர், எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரின் கையில் இருந்த பணத்தாள்களைத் தொட்டபோது, மேஜிக் வித்தையை பயன்படுத்தி ஒரு இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளார்.

இந்தச் சம்பவம் கடந்த மாதம் முதலாம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக ஊழியர் நிலைய முகாமையாளருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, காலி துறைமுகப் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, காலி துறைமுகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் மெஷான் இந்திரக டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
பாதுகாப்பு கமரா காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார், சந்தேக நபர் வாடகைக் காரில் வந்திருந்ததை கண்டறிந்தனர். பின்னர், வாகன இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வாடகைக் கார் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வாகனத்தை கண்காணித்தனர்.
அதன் அடிப்படையில், வத்தளை பகுதியில் இருந்தபோது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளில், கைது செய்யப்பட்டவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், தனது பாட்டியுடன் இலங்கைக்கு வந்திருந்தார் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், இதே போன்ற முறையில் வேறு இடங்களிலும் திருட்டுச் சம்பவங்களில் அவர் தொடர்புடையவரா என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








