இலங்கையில் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் கடன் அட்டைகளுக்கான வட்டி வீதத்தை 1 முதல் 3 சதவீதம் வரை உயர்த்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இதன் காரணமாக, நாடு முழுவதும் கடன் அட்டைகளை பயன்படுத்தும் சுமார் 22 லட்சம் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்றாட தேவைகள் மற்றும் செலவுகளை சமாளிப்பதற்காக பலர் கடன் அட்டைகளை நம்பியிருக்கும் நிலையில், இந்த வட்டி அதிகரிப்பு அவர்களுக்கு மேலதிக நிதிச் சுமையை ஏற்படுத்தும் என நிதி ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சமீபத்தில் இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை ஒரு சதவீதத்தால் அதிகரித்திருந்தது. இதன் தாக்கம் தற்போது கடன் அட்டை வைத்திருப்பவர்களிடமும் பிரதிபலித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள 26 சதவீத வருடாந்த வட்டி வீதத்தை, ஜுலை முதலாம் திகதி முதல் 28 சதவீதமாக உயர்த்த சில வங்கிகள் ஏற்கனவே தீர்மானித்துள்ளன.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் கடன் அட்டை வைத்திருப்பவர்கள் வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய மொத்த நிலுவைக் கடன் தொகை 194,105 மில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது.








