ஒரு வருடத்திற்கும் மேலாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணி இன்று (08) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தகவலின்படி, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில், வேரஹேராவில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள வளாகத்தில் இன்று காலை 10.00 மணிக்கு இந்தப் பணி மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
டெண்டர் செயல்முறையில் ஏற்பட்ட சிக்கல்களால், 2025ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதற்கான புதிய ஒப்பந்தத்தை அரசாங்கம் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வழங்கியிருந்தது.

22 ஆண்டுகளாக இந்தப் பணியை மேற்கொண்டு வந்த நிறுவனத்தின் ஒப்பந்த காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதிய நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்காக போக்குவரத்து அமைச்சு கொள்முதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
இதன் காரணமாக, கடந்த ஆண்டு மே 1ஆம் திகதி முதல் இலக்கத் தகடு அச்சிடும் பணி நிறுத்தப்பட்டிருந்ததுடன், புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் உட்பட நான்கரை இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் அச்சிடப்படாமல் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.








