நாமல் ராஜபக்ஷவை அடுத்த தேர்தலில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக்கும் வரை தாம் ஓயப்போவதில்லை என ‘ராவணா பலய’ அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் “கிராமங்கள் தோறும்” வேலைத்திட்டத்தின் கீழ், அநுராதபுரம் மாவட்டத்தின் கெக்கிராவை தொகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது அரசாங்கத்தில் உள்ளவர்கள் அடுத்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என தங்களிடம் கேட்பதாகவும், நாமல் ராஜபக்ஷவிலிருந்து விலகுமாறு பல்வேறு தரப்பினரால் அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாகவும் கூறினார்.
“எங்களுக்கு முதுகெலும்பு இருக்கிறது. நாமல் ராஜபக்ஷவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்” என அவர் வலியுறுத்தினார்.
மேலும், தற்போதைய அரசாங்கம் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட, டயஸ்போரா மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டிருப்பது குறித்து கருத்து வெளியிட்ட சத்தாதிஸ்ஸ தேரர், நாட்டின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஒருவருக்கு அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் பெயரில் சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், உண்மையான சூத்திரதாரிகள் இன்னும் சுதந்திரமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
அதேவேளை, சுரேஷ் சலேவைச் சந்தித்த அவரது குடும்பத்தினர் மூலம் கிடைத்த தகவல்களை நினைவுகூர்ந்த அவர், “நான் இந்த நாட்டை நேசித்தேன், இன்றும் நேசிக்கிறேன். எனது இறுதிக்காலத்தில் எனது கண்களைத் தானம் செய்ய தீர்மானித்துள்ளேன்” என்ற சுரேஷ் சலேவின் வார்த்தைகள் தம்மை உணர்ச்சிவசப்படுத்தியதாக தெரிவித்தார்.








