எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள் பாதுகாப்பான முறையில் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கனடா வேலைவாய்ப்புக்காக எத்தியோப்பியா ஊடாக பயணிக்கும் நோக்குடன் வந்திருந்த அந்த மூன்று இலங்கையர்களும் அங்கே கடத்தப்பட்டிருந்தனர்.
அவர்களை விடுவிப்பதற்காக, ஒவ்வொருவரிடமிருந்தும் தலா 30,000 லர் வீதம், மொத்தம் 90,000 டொலர்களை கப்பமாக வழங்குமாறு கடத்தல்காரர்கள் கோரியிருந்தனர்.
இந்தக் கடத்தல் குறித்து எதியோப்பியாவிலுள்ள இலங்கைத் தூதரகம், அந்நாட்டின் போலே புறநகர் பொலிசாரிடம் முறைப்பாடு மேற்கொண்டதையடுத்து, கடந்த மே 26 அன்று விசாரணைகள் தொடங்கியிருந்தன.
காணாமல் போவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் அந்த மூன்று இலங்கையர்களும் எத்தியோப்பியாவுக்கு வந்திருந்தனர் என்பது தெரியவந்துள்ளது.
விரிவான கண்காணிப்பு மற்றும் விசாரணைகளின் விளைவாக, விமான நிலையத்திலிருந்து இலங்கையர்கள் அழைத்துச் செல்லப்பட்ட வாகனம் குறித்த தகவல்களை பொலிசார் கண்டறிந்திருந்தனர்.
மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், எத்தியோப்பியாவின் ஒரோமியா பிராந்தியத்தில் உள்ள ஷஷெமனே என்ற நகரத்தில் உள்ள ஒரு குடியிருப்பு வீட்டில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அதன்படி, நாட்டின் பாதுகாப்புப் படைகள் நடத்திய திடீர் சோதனையின்போது அந்த மூன்று இலங்கையர்களையும் வெற்றிகரமாக மீட்டதோடு, இரண்டு எத்தியோப்பியர்கள் மற்றும் நான்கு பாகிஸ்தானியர்கள் உட்பட 6 சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
எத்தியோப்பிய தேசிய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு சேவை, கூட்டாட்சி (பெடரல்) பொலிஸ், தகவல் வலையமைப்பு பாதுகாப்பு நிர்வாகம் மற்றும் ஓரோமியா பிராந்திய பொலிஸ் ஆகியவற்றின் கூட்டு முயற்சி காரணமாகவே மூன்று இலங்கையர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.








