எரிபொருள் ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாளையும் மறுநாளும் இலங்கையை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார இந்த தகவலை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஒக்டேன் 95 பெற்றோல் 7,000 மெற்றிக் தொன் மற்றும் ஒக்டேன் 92 பெற்றோல் 29,000 மெற்றிக் தொன் ஏற்றிய கப்பல் ஒன்று நாளை (10) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
அதேவேளை, 29,000 மெற்றிக் தொன் டீசல் ஏற்றிய மற்றுமொரு எரிபொருள் தாங்கிக் கப்பல் நாளை மறுதினம் (11) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
இந்தக் கப்பல் சிங்கப்பூர் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு பயணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 32,000 மெற்றிக் தொன் டீசல் மற்றும் 7,200 மெற்றிக் தொன் சுப்பர் டீசல் ஆகியவற்றை ஏற்றிய கப்பலிலிருந்து கொழும்பு துறைமுகத்தில் எரிபொருளை இறக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.








