வடகிழக்கு தமிழர்கள் வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தங்களது அரசியல் உரிமைகளுக்காக போராடி வருகின்ற போதிலும், சாதாரண மாகாண சபை அதிகாரத்தைக் கூட வழங்க அரசாங்கம் தயாராக இல்லை என ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற நினைவு பாடல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஐம்பது ஆண்டுகள் கடந்தும், அதற்குக் காரணமான அரசியல் மற்றும் உரிமை சார்ந்த பிரச்சினைகள் இன்றும் தீர்க்கப்படாமல் தொடர்வதாக குறிப்பிட்டார்.
தமிழ் மக்களின் மொழி, நிலம், கல்வி உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதன் விளைவாகவே தங்களைத் தாங்களே ஆளும் அரசியல் தீர்வை நோக்கி வட்டுக்கோட்டை தீர்மானம் உருவானதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஆயுதப் போராட்டம் முடிவடைந்த பின்னரும், கடந்த பல ஆண்டுகளாக தமிழ் மக்கள் அகிம்சை வழியில் தங்களது உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் எழுச்சி பெறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக பயங்கரவாதத் தடைச் சட்டம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அண்மையில் கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் எழுச்சிப் பாடல் பாடியதற்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை இதற்கான உதாரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு இதுவரை நிலையான தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை என்றும், மாகாண சபைகளுக்கான அடிப்படை நிர்வாக அதிகாரங்களைக் கூட வழங்குவதில் அரசாங்கம் தயக்கம் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கு உரிய அரசியல் அதிகாரமும் உரிமைகளும் கிடைக்கும் வரை அவர்களின் போராட்டம் தொடரும் என்றும், எதிர்கால சந்ததியினரும் அதே கோரிக்கைகளுடன் முன்னெடுப்பார்கள் என்றும் செ. நிலாந்தன் வலியுறுத்தினார்.








