யாழ்ப்பாண இராச்சியத்தின் சங்கிலிய மன்னனின் மந்திரி மனையின் வரலாற்றுப் பெருமையைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சிகளில் அனைவரும் பங்களிக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
நல்லூரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மந்திரி மனை அழியும் அபாயத்தில் இருந்த நிலையில், அதனைப் புனரமைப்பது தொடர்பாக நம்பிக்கைப் பொறுப்பாளர்களும் தொல்லியல் திணைக்களமும் தற்போது இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக அவர் கூறினார்.
இருதரப்பு கலந்துரையாடல்களின் பின்னர், பொதுமக்களின் நிதி பங்களிப்புடன் மந்திரி மனையைப் புனரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான நிதி தொல்லியல் திணைக்களத்திடம் இல்லாத காரணத்தினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

புனரமைப்புப் பணிகளை தொல்லியல் திணைக்களமே மேற்கொள்ளவுள்ளதுடன், அதற்குத் தேவையான நிதியை பொதுமக்களின் ஆதரவுடன் திரட்டித் திணைக்களத்திடம் வழங்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தொல்லியல் திணைக்களம் நெதர்லாந்து நாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்புடன் நல்லூர் மந்திரி மனை அமைந்திருந்த பகுதிகளில் ஸ்கேன் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும், புனரமைப்பு நடவடிக்கைகளுக்கான ஆரம்ப கட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மந்திரி மனையை எவ்வாறு பாதுகாத்து புனரமைக்கலாம் என்பது தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைக்கலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
இந்த முயற்சிக்கு அரசியல் தொடர்பு எதுவும் இல்லை என வலியுறுத்திய சிவஞானம், அந்தப் பகுதியில் வசிப்பவர், முன்னாள் மாநகர சபை ஆணையாளர் மற்றும் மாகாண சபை அவைத் தலைவர் என்ற அடிப்படையிலேயே இந்த செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.








