உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலத்தில் வடக்கில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் மேடைகளில் ஒலிபரப்பப்பட்ட பாடல், விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையிலானதாக இருந்ததாகக் கூறிய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அதற்குப் பொறுப்புக்கூறுவது யார் என கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று (9) நடைபெற்ற முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சியில் இளைஞர் ஒருவர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பாடலைப் பாடியதற்காக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அதேவேளை, கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது வடக்கில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் மேடைகளில் ஒலிபரப்பப்பட்ட பாடலும் விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் தன்மையுடையதாக இருந்ததாக அவர் குற்றஞ்சாட்டினார். அந்தப் பாடல் தொடர்பான காணொளிகள் மற்றும் பதிவுகள் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் சமூக ஊடகப் பக்கங்களிலும் பகிரப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், முன்னாள் புலனாய்வுத் துறைத் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான நடவடிக்கைகள் அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுவதாகவும் நாமல் ராஜபக்ஷ குற்றம்சாட்டினார். அவரைக் கைது செய்து விசாரணை நடத்துவதில் பிரச்சினையில்லை என்றாலும், அவருக்காக ஆதரவு தெரிவிப்பது குற்றமாக கருதப்படக்கூடாது என்றும் கூறினார்.
இராணுவத்தினருக்காக தாம் எப்போதும் குரல் கொடுப்போம் எனத் தெரிவித்த அவர், இந்த விவகாரங்களை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகவும் விமர்சித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றாலும், அதனை அரசியல் மேடைகளின் பிரசார கருவியாக மாற்ற முயற்சிக்கக் கூடாது என்றும், இதனால் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கே அநீதி ஏற்படுவதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.








