உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் உள்ளிட்ட முக்கிய வழக்குகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்னெடுத்து வரும் விசாரணைகளை எந்தவொரு காரணத்திற்காகவும் தடுத்து நிறுத்த முடியாது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நோக்கில் இன்று (09) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியல் இலாபங்களுக்காக போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், விசாரணைகள் சட்டப்படி மற்றும் சுயாதீனமாக தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தடைகள் ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் தொடர்பாக நீதிமன்றத்திற்கு உரிய சான்றுகளுடன் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், விசாரணைகள் தொடர்பாக தவறான அல்லது உண்மைக்குப் புறம்பான தகவல்களை பொதுவெளியில் பரப்புபவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
நாட்டில் முக்கிய குற்றச்சாட்டுகள் மற்றும் ஊழல் விவகாரங்கள் தொடர்பான விசாரணைகள் தீவிரமடையும் சந்தர்ப்பங்களில், பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கில் சில போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவது கடந்த காலங்களில் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள அனைத்து முக்கிய விசாரணைகளும் விரைவாக நிறைவு செய்யப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சிலர் வீதிகளில் போராட்டங்களை முன்னெடுப்பதால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டபூர்வ விசாரணைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என குறிப்பிட்ட அவர், அரசியல் தலையீடுகள் இன்றி சட்டத்தின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என மக்களுக்கு உறுதியளித்தார்.








