காலி தேசிய வைத்தியசாலை மற்றும் மட்டு போதனா வைத்தியசாலை ஆகியவற்றின் புற்றுநோய் பிரிவில் இயங்கிவந்த தலா ஒரு லீனியர் ஆக்சலரேட்டர் இயந்திரம் செயலிழந்துள்ள நிலையில், புற்றுநோயாளர்களுக்கு வழங்கப்படும் கதிரியல் சிகிச்சை சேவைகள் ஸ்தம்பித்துள்ளதாகக் கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்தார்.
இயந்திர செயலிழப்புத் தொடர்பு குறித்து புதன்கிழமை (10) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த லீனியர் ஆக்சலரேட்டர் இயந்திரம் கடந்த 4 ஆம் திகதி செயலிழந்திருந்ததுடன், காலி வைத்தியசாலையில் இருந்த இயந்திரமும் 5 ஆம் திகதியன்று செயலிழந்திருந்தது. இந்நிலையில் வைத்தியசாலைக்கு வருகைதரும் புற்றுநோயாளர்கள் சிகிச்சைகளைப் பெற வழியின்றி கடுமையான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இயந்திரங்களைப் பழுதுபார்க்கும் நிறுவனங்களுடனான சேவை ஒப்பந்தக் காலம் நிறைவடைந்துள்ள நிலையில், குறித்த நிறுவனங்கள் பணியிலிருந்து விலகியுள்ளமையால் செயலிழந்துள்ள இயந்திரங்களைப் பழுதுபார்க்கும் நடவடிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அத்தோடு குறித்த இயந்திரங்கள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாகச் செயலிழந்து வந்த நிலையில் அவற்றை பழுதுபார்க்கும் நடவடிக்கைகளும் காலம் தாழ்த்தியே இடம்பெற்றன.
புற்றுநோயாளர்களுக்குக் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் உரிய சிகிச்சைகளைத் தொடர்ச்சியாக வழங்குவது அவசியம். இவ்வாறான சிகிச்சைகளைத் தனியார் வைத்தியசாலைகளில் பெற்றுக்கொள்வதாயின் பெருமளவான பணத்தை செலவிட வேண்டி ஏற்படலாம். ஆகையால் சுகாதார அமைச்சின் உரிய அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி இயந்திரங்களைப் பழுதுபார்ப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.








