தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் 30 இலட்சம் இந்திய ரூபாய் பெறுமதியான பொருட்களை இந்திய க்யூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தின் திரேஸ்புரம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தல் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக க்யூ பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, திரேஸ்புரம் கடற்கரையில் விசேட கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, பதிவு எண் இல்லாத இரட்டை இயந்திரம் பொருத்தப்பட்ட பைபர் படகொன்றில் இலங்கைக்கு கடத்துவதற்காக ஏற்றப்பட்டிருந்த 42 மூட்டைகளில் அடைக்கப்பட்ட வாசனை சவர்க்காரங்கள் மற்றும் 11,520 செம்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
பொலிஸார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டதை அவதானித்த கடத்தல் கும்பல், பொருட்களை அங்கேயே கைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, சுமார் 30 இலட்சம் இந்திய ரூபாய் பெறுமதியான பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைபர் படகையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








