வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு யாழ் நகரின் மையப் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த சுவரொட்டியில், ஆளுநரின் அரசியல் தலையீட்டால் சுயாதீனத்தை இழந்து முறைகேடுகளை செய்யும் வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சேவையின் தேவை என ஒவ்வொரு கட்டங்களிலும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் 3 கட்டங்களாக இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை ஆசிரியர்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி வவுனியாவில் இன்று (11) ஆசிரியர்கள் கையெழுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வடமாகாணத்தில் சேவையின் தேவை கருதிய இடமாற்றம் என்ற வகையில் ஆசிரியர்களை பழிவாங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் நிலையிலும் அரசாங்கம் இது தொடர்பில் எந்தவொரு நிலைப்பாட்டிற்கும் வரவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.








