புத்தளம் மாவட்டத்தின் மதுரங்குளிய 10ஆம் கட்டை பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில், QR குறியீட்டைக் (QR Code) காட்டுமாறு கேட்ட நிலைய ஊழியர் மீது இரு இளைஞர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்ததாவது, மோட்டார் சைக்கிளில் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு வந்த இரு இளைஞர்கள் தங்களது வாகனத்திற்கு எரிபொருள் வழங்குமாறு கோரியுள்ளனர். இதன்போது, நடைமுறைக்கமைய QR குறியீட்டைக் காட்டுமாறு ஊழியர் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த குறித்த இளைஞர்கள், “நாங்கள் மதுரங்குளியைச் சேர்ந்தவர்கள் எங்களுக்கு என்ன QR குறியீடு வேண்டும்?” எனக் கூறி ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், அவர்கள் ஊழியரை துரத்திச் சென்று தாக்கியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் தலைக்கவசம் அணியாமல் இருந்ததுடன், மதுபோதையிலும் இருந்ததாக எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவில் (CCTV) பதிவாகியுள்ளதுடன், அதனை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மதுரங்குளி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








