சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் குறைந்துள்ள நிலையில், இலங்கையிலும் எரிபொருள் விலைகளை உடனடியாகக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவிய போர் சூழ்நிலையை காரணம் காட்டி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததாக தெரிவித்து அரசாங்கம் முன்னதாக எரிபொருள் விலைகளை அதிகரித்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஆனால் தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, போர் தொடங்குவதற்கு முந்தைய நிலையை விட குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், உலக சந்தையில் விலை உயரும்போது உள்நாட்டிலும் விலை உயர்த்தப்பட்டால், விலை குறையும் போது அதற்கேற்ப எரிபொருள் விலைகளும் குறைக்கப்பட வேண்டும் என்றார்.
நாட்டில் எரிபொருளுக்கு அதிகளவிலான வரிகள் விதிக்கப்படுவதாகவும், ஆட்சிக்கு வரும் முன்பு அவற்றை நீக்கி குறைந்த விலையில் எரிபொருள் வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்ததாகவும் அவர் நினைவூட்டினார்.

எனினும், உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை சரிவின் பலனை மக்களுக்கு வழங்குவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும், மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் வகையில் எரிபொருள் விலைகளை மறுஆய்வு செய்து உடனடியாகக் குறைக்க வேண்டும் என்றும், அரசாங்கம் மக்கள் நலனை முன்னிறுத்தி செயற்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
அத்துடன், மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ந்து குரல் கொடுப்பதே எதிர்க்கட்சியின் பொறுப்பு எனவும், எரிபொருள் விலைக் குறைப்பு தொடர்பான கோரிக்கையை ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து முன்வைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.








