1888 ஆம் ஆண்டு சேர் பொன்னம்பலம் இராமநாதன் “இலங்கைச் சோனகர்களின் இனவரலாறு” (The Ethnology of the ‘Moors’ of Ceylon) என்ற ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டு இருந்தார். இது இலங்கை இஸ்லாமியர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியது.
அவர் அப்படி என்ன வாதிட்டார், அதற்காக அவர் முன்வைத்த ஆதாரங்கள் என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.
இலங்கை முஸ்லிம்கள் (சோனகர்கள்) அரேபியர்கள் அல்லர், அவர்கள் இஸ்லாமிய மதத்தைத் தழுவிய தமிழர்களே என்பதை நிரூபிக்க இராமநாதன் பின்வரும் பிரதான வாதங்களை முன்வைத்தார்.
மொழித் தொடர்பு: இலங்கை முஸ்லிம்களின் தாய்மொழி தமிழ். அரேபிய வர்த்தகர்களின் நேரடி வாரிசுகளாக அவர்கள் இருந்திருந்தால், அவர்களின் மொழி அரபு மொழியாகவோ அல்லது குறைந்தது அரபு கலந்த வேறு ஒரு கலப்பு மொழியாகவோ இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அன்றாட வாழ்விலும், வர்த்தகத்திலும், மார்க்கப் போதனைகளிலும் தமிழ் மொழியையே (அரபு-தமிழ்) பயன்படுத்துகிறார்கள்.
சீதன முறை: தூய இஸ்லாமிய மரபுப்படி, திருமணத்தின் போது மணமகன்தான் மணமகளுக்கு ‘மஹர்’ கொடுக்க வேண்டும். ஆனால், இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் தமிழர்களைப் போலவே மணமகள் வீட்டார் மணமகனுக்கு வீடோ, காணியோ ‘சீதனமாக’ வழங்கும் வழக்கம் இருந்தது.
தாய்வழிச் சொத்துரிமை: குறிப்பாகக் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மத்தியில் ‘குடி முறை’ மற்றும் முக்குவர் சட்டத்தின் அடிப்படையிலான தாய்வழிச் சொத்துரிமை காணப்பட்டது. இது அப்பட்டமான ஒரு தமிழ் மரபாகும். தந்தைவழிச் சமூகமான அரேபியர்களிடம் இந்த வழக்கம் கிடையாது.
திருமணச் சடங்குகள்: தமிழர்களின் திருமணங்களைப் போலவே மாலை மாற்றுவது, தாலி போன்ற ஒரு ஆபரணத்தைக் கட்டுவது உள்ளிட்ட பல சடங்குகள் முஸ்லிம்களிடமும் காணப்பட்டன.
மரபணு மற்றும் வரலாற்றுத் தொடர்பு: வர்த்தகத்திற்காக வந்த அரேபியர்கள் தங்களுடன் பெண்களை அழைத்து வரவில்லை. அவர்கள் இங்குள்ள உள்ளூர் தமிழ்ப் பெண்களையே திருமணம் செய்துகொண்டனர். எனவே, பல தலைமுறைகள் கடந்த நிலையில், அவர்களின் இரத்தமும் மரபணுவும் பெரும்பான்மையாகத் தமிழர்களுடையதே தவிர, அவர்கள் தூய அரேபியர்கள் அல்லர் என வாதிட்டார்.
இராமநாதனின் இந்த வாதம் கொழும்பு முஸ்லிம் உயர்குழாமினர் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. தங்களை அரேபியர்களின் நேரடி வாரிசுகளாகக் கருதிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்த அவர்கள், இதனைத் தங்களின் தனித்துவ அடையாளத்தின் மீதான தாக்குதலாகக் கருதினர்.
அரேபிய வம்சாவளி வாதம்: மாக்கான் மாக்கார், சித்தி லெப்பை மற்றும் ஐ.எல்.எம். அப்துல் அசீஸ் போன்ற தலைவர்கள் இராமநாதனின் வாதத்தைக் கடுமையாக நிராகரித்தனர். கொழும்பு முஸ்லிம் சமூகத்தின் முக்கிய தலைவரான ஐ.எல்.எம். அப்துல் அசீஸ், இராமநாதனின் வாதங்களை முழுமையாக மறுத்து “A Criticism of Mr. Ramanathan’s Ethnology of the Moors of Ceylon” என்ற ஒரு விரிவான நூலை எழுதி வெளியிட்டார்.
“நாங்கள் அரபு மொழியை மறந்து தமிழ் மொழியைப் பேசுவதும், சில உள்ளூர்ப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதும் உண்மைதான். வர்த்தகத்துக்காக வந்த எங்கள் அரேபிய மூதாதையர்கள் உள்ளூர்ப் பெண்களைத் திருமணம் செய்ததால் இந்த மாற்றம் நிகழ்ந்தது. ஒரு சமூகம் வேறொரு மொழியைப் பேசுவதால் மட்டும் அந்த இனத்தின் பூர்வீகம் மாறிவிடாது” என அவர்கள் ஆணித்தரமாக வாதிட்டனர். ஆங்கிலம் பேசும் கறுப்பின மக்களை ஆங்கிலேயர்கள் எனச் சொல்ல முடியாது என்பது அவர்களின் பிரதான தர்க்கமாக இருந்தது.
“தமிழர்களுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, நாங்கள் தமிழ் பேசும் அரேபியர்களே தவிர தமிழர்கள் அல்லர்” என்பதை இவர்கள் ஆணித்தரமாக வலியுறுத்தியிருந்தார்கள்.
முஸ்லிம்கள் சட்டவாக்கக் கழகத்தில் தமக்கெனத் தனியான ஒரு ஆசனத்தைப் பிரித்தானிய அரசாங்கத்திடம் இருந்து பெறுவதற்காக (1889 இல்) முன்வைத்த பிரதான வாதம் இதுவேயாகும்.
“நாங்கள் தமிழர்கள் அல்லர்” என்று கூறித் தங்களுக்கெனத் தனித்துவ அடையாளத்தை உருவாக்கிக்கொண்ட இந்த அரேபிய வம்சாவளி வாதமே, பிற்கால இலங்கை அரசியலின் திசையையும் தீர்மானித்தது. சுதந்திரக் காலப்பகுதியில் (1940களில்) சிறுபான்மையினரான தமிழர்களுக்குப் பிரித்தானியாவிடம் இருந்து சமஉரிமைகள் (50:50) கிடைக்காமல் இருப்பதற்காக, இதே முஸ்லிம் தலைவர்கள் சேனநாயக்க தலைமையிலான சிங்களப் பேரினவாத அரசாங்கத்துடன் கைகோர்த்தனர் என்பது ஈழத்தமிழ் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத இஸ்லாமியர்களின் துரோக வரலாறாகும்.
நாங்கள் அரேபியர்கள் என்ற ‘தமிழ் அடையாள மறுப்பு’ அரசியல் இன்றுவரை இலங்கை சிறுபான்மைச் சமூகங்களுக்கு இடையிலான இடைவெளியைத் தீர்மானிக்கும் ஆணிவேராக இருந்து வருகிறது.








