மதவாச்சி பகுதியில் உள்ள சிகை அலங்கார நிலையம் ஒன்றின் உரிமையாளரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூன் 9ஆம் திகதி, மதவாச்சியில் அமைந்துள்ள சலூன் ஒன்றுக்குள் நுழைந்த நபர் ஒருவர், அங்கிருந்த உரிமையாளரை தாக்கிய காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து இந்த சம்பவம் கவனம் பெற்றது.
சம்பவம் தொடர்பாக ஜூன் 10ஆம் திகதி மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

விசாரணைகளின் முன்னேற்றத்தின் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கூர்மையான ஆயுதமொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இந்த தாக்குதல் கப்பம் பெறும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட போதிலும், இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், சந்தேகநபருக்கும் சலூன் உரிமையாளருக்கும் இடையில் நீண்டகாலமாக இருந்து வந்த தனிப்பட்ட தகராறே சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று மதவாச்சி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.








