மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபையினால் 2026 ஜூன் 15 முதல் 20 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள “விசேட டெங்கு ஒழிப்பு வார” வேலைத்திட்டத்தின் கீழ், பாலையடிவட்டை பொதுச் சந்தை அமைந்திருந்த பகுதியில் கடந்த (16) திகதி பாரிய விசேட சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பகுதி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவ முகாமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி (02.04.2026) இராணுவத்தினர் அங்கிருந்து முழுமையாக வெளியேறியிருந்தனர்.
நீண்டகாலமாக பராமரிப்பின்றி புதர்மண்டிக் காணப்பட்ட இப்பகுதி, டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயமிக்க இடமாக மாறியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி. மதிமேனன் மற்றும் உப தவிசாளர் த. கயசீலன் ஆகியோரின் நேரடித் தலைமையில் அப்பகுதியில் பாரிய தூய்மைப்படுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

வெல்லாவெளி பகுதி பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI), பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் எனப் பலர் ஒன்றிணைந்து டெங்கு பரவக்கூடிய இடங்களை இனங்கண்டு சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும், நீண்டகாலமாக தேங்கிக் கிடந்த கழிவுகள் மற்றும் புதர்களை அகற்றி, நிலப்பரப்பை முழுமையாகத் தூய்மைப்படுத்துவதற்காக பிரதேச சபைக்குச் சொந்தமான JCB உள்ளிட்ட கனரக இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.
நீண்டகாலத்தின் பின்னர் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ள பொதுச் சந்தை வளாகம் இவ்வாறு விசேட திட்டத்தின் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டமைக்காக, பிரதேச மக்கள் தங்களது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.












