தெல்லிப்பழை புற்றுநோய் பிரிவில் பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில், யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று (19) முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
தனக்கு எதிராக சமூக ஊடகங்கள் ஊடாக அவதூறான மற்றும் தொந்தரவு ஏற்படுத்தும் வகையிலான போலிப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, குறித்த வைத்தியர் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் நீதிவான் நஜ்மி ஹூசைன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
வழக்கின் போது, எதிர்மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, அவர் பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் பேச்சுச் சுதந்திரம் அவருக்கு உண்டு என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

எனினும், அந்த வாதத்தை நிராகரித்த நீதிவான், ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் அல்லது சாதாரண குடிமகனாக இருந்தாலும், பேச்சுச் சுதந்திரம் வரையறைகளுக்கு உட்பட்டதே என சுட்டிக்காட்டினார்.
மேலும், எந்தவிதமான நம்பகமான சான்றுகளும் இன்றி ஒரு அரச அதிகாரி அல்லது வைத்தியரின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாகவும், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் அவதூறு பரப்ப யாருக்கும் உரிமை இல்லை என நீதிவான் தெரிவித்தார்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் வைத்தியருக்கு எதிராக இனிமேல் சமூக ஊடகங்கள் அல்லது வேறு எந்த வழியிலும் அவதூறான மற்றும் போலியான தகவல்களை பரப்பக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன், இதுவரை வெளியிடப்பட்டுள்ள அவதூறான மற்றும் போலிப் பிரச்சாரக் காணொளிகள் அனைத்தையும் உடனடியாக நீக்குமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
எதிர்மனுதாரர் சார்பில் சட்டத்தரணி கௌசல்யா நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.








