2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோது அவர் இதனை குறிப்பிட்டார்.
இம்முறை பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 11,790 ஆக பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் சித்தியடைந்த மாணவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, 2025 ஆம் ஆண்டு விஞ்ஞானப் பாடத்தில் 70.1 சதவீத மாணவர்கள் சித்தியடைந்துள்ள நிலையில், கடந்த ஆண்டு அந்த வீதம் 69.07 சதவீதமாக இருந்தது.
அதேபோல், கணிதப் பாடத்தில் இம்முறை 72.03 சதவீத மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன், கடந்த ஆண்டு அது 71.06 சதவீதமாக பதிவாகியிருந்ததாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.








