ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த புதன்கிழமை கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, இரு தலைவர்களும் சுமுகமான சூழலில் நலம் விசாரித்ததுடன், நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் தொடர்பாகவும் விரிவாக கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதாக கூறப்படுகிறது.
மேலும், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து நேரடி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க இருதரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வலுவான எதிர்க்கட்சி அணியை உருவாக்கும் முயற்சிகள் அரசியல் அரங்கில் பேசப்பட்டு வரும் நிலையில், ரணில் – சஜித் சந்திப்பு புதிய அரசியல் மாற்றங்களுக்கான முன்னோட்டமாக இருக்குமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.








