காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் ஐரோப்பிய நாடுகள் முன்னெப்போதும் இல்லாத கடுமையான வெப்ப அலையை எதிர்கொண்டு வருகின்றன.
பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி மற்றும் போர்ச்சுகல் உள்ளிட்ட பல நாடுகளில் வெப்பநிலை 40 செல்சியஸைத் தாண்டி பதிவாகி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது சாதாரண கோடை வெப்பம் அல்ல என்றும், காலநிலை மாற்றத்தின் தீவிரமான விளைவாக இந்த நிலை உருவாகியுள்ளதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பும் பருவநிலை மாற்றமே இந்த அதீத வெப்பத்திற்கான முக்கிய காரணம் என சுட்டிக்காட்டியுள்ளது.
பிரான்சின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 செல்சியஸைத் தாண்டியுள்ள நிலையில், நாட்டின் மூன்றில் ஒரு பகுதிக்கு ‘ரெட் அலர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
கடும் வெப்பம் காரணமாக நாடு முழுவதும் 845 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் கொண்டவர்கள் அவசியமில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீரிழப்பு மற்றும் வெப்பத்தால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், பொது இடங்களில் மது அருந்துதல், சில ரயில் சேவைகள் மற்றும் வெளிநடப்பு இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றுக்கு பிரான்ஸ் அரசு தற்காலிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், தென்கிழக்கு பிரான்சின் கார்பென்ட்ராஸ் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குடும்பக் காரின் உள்ளே 2 மற்றும் 4 வயதுடைய இரண்டு குழந்தைகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த உள்ளூர் அரசு வழக்கறிஞர் ஹெலன் மோர்கஸ், குழந்தைகளின் மரணத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், நிலவி வரும் கடுமையான வெப்ப அலை முக்கிய காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகள் சுட்டிக்காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
ஐரோப்பா முழுவதும் தீவிரமடைந்து வரும் இந்த வெப்ப அலை, காலநிலை மாற்றத்தின் அபாயங்கள் குறித்து மீண்டும் உலக கவனத்தை ஈர்த்துள்ளது.







