அரசு மற்றும் தனியார் பாடசாலைகளில் 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான 2026 ஆம் ஆண்டு பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்று (ஜூன் 22) முதல் ஆரம்பமாகியுள்ள இந்த விண்ணப்ப செயல்முறை, வரும் ஜூலை மாதம் 16 ஆம் திகதி வரை இணையவழியாக (Online) மட்டுமே நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பரீட்சைக்கு மாணவர்கள் தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்க முடியாது. அனைத்து விண்ணப்பங்களும் அந்தந்த பாடசாலை அதிபர்கள் அல்லது தலைவர்கள் ஊடாகவே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அதிபர்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஆகியவற்றுள் ஒன்றிற்குள் பிரவேசித்து, அறிவுறுத்தல்களைப் பின்பற்றி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
அதிபர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொற்களைப் பயன்படுத்தி மட்டுமே இதனுள் நுழைய முடியும். விண்ணப்பித்த பின் அதன் அச்சிடப்பட்ட பிரதியை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியமாகும்.
2026 ஆம் ஆண்டில் 12 ஆம் தரத்தில் கல்வி கற்று, 2027 ஆம் ஆண்டில் முதன்முறையாகப் பொதுத்தராதர உயர்தர (A/L) பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்கள் மட்டுமே இப்பரீட்சைக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.
தனியார் பாடசாலைகள் தங்களது மாணவர்களின் அனைத்து விபரங்களையும் தரவு அமைப்பில் உள்ளிட்ட பின்னரே கட்டணங்களைச் செலுத்த வேண்டும். கட்டணங்கள் செலுத்தப்பட்ட பின்னர், புதிய மாணவர்களின் விபரங்களை மீண்டும் சேர்க்க முடியாது என திணைக்களம் எச்சரித்துள்ளது.








