ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்ட அனைத்து குற்றங்களும் ஒடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்காக நாட்டில் தேவையான சட்டங்களும் நிறுவனங்களும் உள்ளன என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவது தொடர்பான பிரேரணை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இன்று எதிர்க்கட்சியினரே பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பிரதானமாக உள்ளதாகவும், குற்றங்களை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக அவர்கள் செயற்படுவதாகவும் ஜனாதிபதி குற்றம்சாட்டினார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட பலர் குற்றங்களை ஒடுக்குவதில் முக்கிய பங்காற்றி வருவதாகவும், அதேவேளை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, பொதுப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது எதிர்க்கட்சியால் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தாஜுதீன் விவகாரம் மற்றும் ஈஸ்டர் தாக்குதல் போன்ற சம்பவங்களை குறிப்பிட்ட ஜனாதிபதி, இவ்வாறான குற்றங்களின் பின்னணியில் அரசியல் மற்றும் அரச இயந்திரத்தின் சில பகுதிகள் இருந்ததாகவும், அவை தொடர்பான உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
வெள்ளை வேன் கடத்தல்கள் உள்ளிட்ட கடந்த கால குற்றச்செயல்களை நினைவுகூர்ந்த அவர், குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்காது என வலியுறுத்தினார்.
மேலும், விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டால் அரசாங்கம் அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் என்றும், பொதுமக்களும் நீதியை நிலைநாட்ட ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் வளர்வதற்கு அரசியல் அதிகாரமே காரணமாக இருந்துள்ளதாகவும், அந்த பாதுகாப்பு வலையமைப்பை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதேவேளை, கடந்த காலத்தில் 3,390 கிலோ ஹெரோயின், 304 கிலோ கொக்கெய்ன், 5,543 கிலோ ஐஸ் உள்ளிட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்காக அரசாங்கம் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும், போதைப்பொருள் வலையமைப்பை நாட்டிலிருந்து முழுமையாக ஒழிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) இந்த வருடத்துக்குள் நீக்கப்படும் என்றும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை இலக்காகக் கொண்ட புதிய சட்டமூலம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி அறிவித்தார்.
அத்துடன், ஆட்சியாளருக்குப் பயப்படும் சமூகம் அல்ல, ஆட்சியாளரை கேள்விக்குள்ளாக்கும் ஜனநாயக சமூகமே தேவை எனவும் அவர் வலியுறுத்தினார்.








