இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு வர முயன்ற இலங்கைப் பெண்ணொருவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (23) இலங்கை நோக்கி பயணிக்க முயன்ற பெண்ணின் கடவுச்சீட்டை வெளிநாட்டவர் பதிவு மண்டல அதிகாரிகள் பரிசோதித்தபோது சந்தேகத்திற்கிடமான தகவல்கள் கண்டறியப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விசாரணைகளில், குறித்த பெண் கடந்த 2001 ஆம் ஆண்டு இலங்கை கடவுச்சீட்டின் மூலம் இந்தியா வந்திருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் இந்திய குடியுரிமை பெற்றவர் போன்று இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி மீண்டும் இலங்கைக்கு செல்ல முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மேலதிக விசாரணைகளில், கைது செய்யப்பட்டவர் இலங்கையைச் சேர்ந்த 58 வயதுடைய மெரினா ஆனி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் 2001 ஆம் ஆண்டு இந்தியா வந்த பின்னர் குவைத்துக்கு சென்று, 2003 ஆம் ஆண்டு இந்தியாவின் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு மீண்டும் இந்தியாவில் குடியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்றவர் போன்று ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்று, தனது இலங்கை அடையாளத்தை மறைத்து இந்திய கடவுச்சீட்டையும் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, மெரினா ஆனி கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்த இந்திய ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.








