வெனிசுலாவில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3 வயது சிறுவன், ஆறு நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
கிளைபர் மொரான் என அடையாளம் காணப்பட்டுள்ள சிறுவன், லா குவைரா மாகாணத்தில் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டதாக வெனிசுலா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுவனுக்கு உடனடியாக முதலுதவி வழங்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைக்காக கராகஸ் நகரில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு, குடிநீர், தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவான இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,943 ஆக உயர்ந்துள்ளதுடன், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாசாவின் ஆரம்பகட்ட செயற்கைக்கோள் தரவுகளின்படி, 58 ஆயிரத்திற்கும் அதிகமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன அல்லது முற்றிலும் அழிந்துள்ளன.
அதேவேளை, பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார சேவைகள் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும், தொற்றுநோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்நிலையில், சர்வதேச மீட்புக் குழுக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களைத் தேடும் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.








