சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் திரைகளுக்கு சிறுவர்கள் அதிகளவில் அடிமையாகி வரும் நிலை தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதார அமைச்சின் சம்பந்தப்பட்ட பிரிவுகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதுடன், சில பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, பிரதமர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சருடனும் இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து இந்த நிலையைத் தடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சில மாணவர்கள், தாங்கள் அறியாமலேயே இந்தப் பழக்கத்திற்கு ஆளானதாக தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் திரைகளின் மீதான அதிகப்படியான சார்பு, எதிர்காலத்தில் பிள்ளைகளை போதைப்பொருள் பயன்பாட்டை நோக்கி இட்டுச் செல்லக்கூடும் என மனநல மருத்துவர் சமிந்த வீரசிறிவர்தன எச்சரித்துள்ளார்.
டிஜிட்டல் திரைகளுக்கு அடிமையாவதால் மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றங்கள், போதைப்பொருள் பயன்பாட்டிற்கான நாட்டத்தை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.








