அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டங்களுக்கு மகா சங்கத்தினரிடமிருந்து கிடைக்கும் ஆன்மீக வழிகாட்டலும், சமூக விழுமியங்களை வலுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பும் முக்கியமான பலமாக அமைவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டை நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகளுடன், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் அரசாங்கத்தின் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்து, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளை நவீனமயப்படுத்துவதுடன், புதிய தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
எனினும், நாட்டின் முன்னேற்றத்திற்கு பொருளாதார வளர்ச்சி மற்றும் நவீன தொழில்நுட்பம் மாத்திரம் போதுமானதல்ல என சுட்டிக்காட்டிய அவர், பொறுப்புணர்வு, ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் மனிதநேய விழுமியங்களையும் சமூகத்தில் வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், வனவாசி மற்றும் ஆரண்யவாசி பிக்குகளின் எளிமையான வாழ்க்கை முறை, ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழும் பண்புகள் நாட்டை நவீனமயப்படுத்தும் பயணத்தில் முன்மாதிரியாக அமையக்கூடும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டை புதுப்பிக்கும் பணியை அரசாங்கத்தால் மாத்திரம் முன்னெடுக்க முடியாது என தெரிவித்த பிரதமர், உருவாக்கப்படும் புதிய வசதிகள் மற்றும் வாய்ப்புகளை பொறுப்புடன் பயன்படுத்தி எதிர்கால தலைமுறையிடம் ஒப்படைப்பது அனைவரினதும் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், அரசியல் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பெருமளவான பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.








