கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் உள்ளிட்ட ஐந்து பேரை விசாரணைகளுக்காக ஆஜராகுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தல் கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விசாரணை எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்பது முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்கள் தமது கலாசார ஆடைகளை அணிவதற்கு தடைவிதிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவே வைத்தியசாலை பணிப்பாளர் உள்ளிட்ட ஐந்து பேருக்கும் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அறிவித்தல் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு கிடைத்த பின்னர், குறித்த சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படலாம் என எச்சரிக்கை கடிதங்கள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








