அரசாங்கத்தின் மீது மக்களின் நம்பிக்கை சிதைவடைந்துள்ளதாகவும், தற்போது மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர ஏனைய மாகாணங்களில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குப் பதிலாக அதிக வரிச் சுமைகளை விதித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
மேலும், மாகாணசபைத் தேர்தலை தொடர்ந்து தாமதப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், தேர்தல் நடத்தப்பட்டால் மக்கள் அரசாங்கத்திற்கு தக்க பதிலை வழங்குவார்கள் என்றும் அவர் கூறினார்.








