ஹெட்போன் அல்லது இயர்போன் அணிந்து கொண்டோ அல்லது இசையைக் கேட்டுக்கொண்டு வீதிகளில் செல்லும் பாதசாரிகளுக்கு எதிராக இனிவரும் நாட்களில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸாரின் போக்குவரத்துப் பாதுகாப்பு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இயர்போன்களை அணிந்து கொண்டு செல்வதால் பாதசாரிகள் விபத்துகளுக்கு முகங்கொடுக்கும் போக்கு அதிகரித்துள்ளதாகவும், தற்போது அவர்களுக்கு எச்சரிக்கை மாத்திரம் விடுக்கப்பட்டு வந்தாலும் இனிவரும் நாட்களில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
11 ஆவது தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.








