முன்னாள் கடற்படைத் தளபதியும் அத்மிரல் ஒப் த ப்ளீட் பதவியாளருமான வசந்த கரன்னாகொடவை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) இன்று (03) கைது செய்துள்ளது.
2006 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவுக்கு அதிகாரி ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டபோது, தகுதிகளை முழுமையாகப் பூர்த்தி செய்யாதிருந்ததாகக் கூறப்படும் யோஷித ராஜபக்ஷவை அதிகாரி பதவிக்கு இணைத்தமை மற்றும் அன்றைய நடைமுறைகளுக்கு முரணாக அரச நிதியைப் பயன்படுத்தி அவருக்கு பிரித்தானிய அரச கடற்படைக் கல்லூரியில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பை வழங்கியமை தொடர்பிலான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக வசந்த கரன்னாகொட இன்று முற்பகல் 10.05 மணியளவில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.
இதன்போது, விசாரணை அதிகாரிகள் அவரை ஆணைக்குழு வளாகத்திலேயே கைது செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட வசந்த கரன்னாகொடவை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.








