நாட்டில் தவணை முறை அடிப்படையில் அரிசி வழங்கப்படவுள்ளதாக பரவி வரும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அரச சேவை முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 28ஆவது ஆண்டு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அரசாங்கக் களஞ்சியசாலைகளில் தற்போது போதுமான அளவு நெல் கையிருப்பில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
அடுத்த அறுவடைப் பருவத்திற்கான நெல்லை சேமிப்பதற்காக, தற்போதுள்ள நெல்லை அரிசியாக மாற்றி சந்தைக்கு விநியோகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த அரிசியை அஸ்வசும நலன்புரித் திட்ட பயனாளிகள் மற்றும் அரச ஊழியர்களுக்கு சலுகை விலையில் அல்லது எளிய விநியோக முறையில் வழங்குவது தொடர்பாக மட்டுமே அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும், இதனை சிலர் தவறாகப் புரிந்துகொண்டு அல்லது திட்டமிட்டு “தவணை முறையில் அரிசி வழங்கப்படவுள்ளது” என பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
விவசாயிகளுக்கு நியாயமான விலையையும், நுகர்வோருக்கு மலிவான விலையில் அரிசியையும் உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், அரிசி விலையை செயற்கையாக உயர்த்தும் சில நெல் ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபை மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சந்தையில் அரிசி விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, கீரி சம்பாவிற்கு மாற்றாக குறிப்பிட்டளவு அரிசியை தற்காலிகமாக இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், இதற்காக ஒரு மாத காலத்திற்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த ஆறு மாதங்களுக்கு தேவையான அரிசி கையிருப்பு நாட்டில் இருப்பதாகவும், நெல் கொள்வனவுக்காக அண்மைய அமைச்சரவைக் கூட்டத்தில் 6,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.








