அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், கார் மூலம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற மூவர் சாய்ந்தமருது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.
சனிக்கிழமை (04) அதிகாலை கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றைச் சுற்றிவளைத்து சோதனை நடத்துவதற்காக பொலிஸார் சென்றபோது, அங்கிருந்து கார் ஒன்றில் இருவர் தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ். ரத்னாயக்க தலைமையிலான குழு துரத்திச் சென்றது.
தப்பியோடியவர்களுக்கு வழிகாட்ட மோட்டார் சைக்கிளில் வந்த மற்றொரு நபரையும் பொலிஸார் கைது செய்தனர். இதன்போது பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்க சந்தேக நபரின் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி தப்பி சென்ற காரை தலைக்கவசத்தினால் எறிந்து தடுத்து நிறுத்தி காரில் இருந்த இரு சந்தேக நபர்களையும் சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையம் அருகே காரை மறித்து நிறுத்தி கைது செய்தார்.
இந்த நடவடிக்கையில் 32, 33 மற்றும் 34 வயதுடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், 15 கிராம் 370 மில்லிகிராம் ஹெரோயின், சொகுசு கார், மோட்டார் சைக்கிள், இரண்டு கைத்தொலைபேசிகள், பணம் மற்றும் வங்கி அட்டைகள் உள்ளிட்ட பல சான்றுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
பொலிஸார் வருவதற்கு முன்னரே சந்தேகநபர்கள் பெருமளவிலான போதைப்பொருட்களை பல்வேறு பகுதிகளில் உள்ள விநியோகஸ்தர்களுக்கு பிரித்து வழங்கியிருக்கலாம் என்ற சந்தேகமும் விசாரணைகளில் எழுந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.







