நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொரத்தொட்ட பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு கொலைச் சம்பவம் தொடர்பாக மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். இதையடுத்து ஹோமாகம கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து, கொலைச் சம்பவத்தை மேற்கொள்ள வந்த குழுவினருக்கு உதவியதாகக் கூறப்படும் இரு நபர்கள் நேற்று (19) மாலை கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் குற்றவாளிகள் பயணித்த மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் எனவும், மற்றொருவர் குற்றச் செயலைத் திட்டமிட்டு நிறைவேற்ற உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கியவர் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்களில் ஒருவர் பியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்கொட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றையவர் நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வதுரமுல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் 21 மற்றும் 29 வயதுடையவர்கள் என்பதுடன், அவர்கள் ரணால மற்றும் பள்ளம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் பின்னணியில் மேலும் நபர்கள் தொடர்புடையுள்ளனரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ஹோமாகம கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








