இலங்கையின் ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சூரியனின் தென்திசை நோக்கிய சார்பு இயக்கம் காரணமாக இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கும் காலப்பகுதி தொடர்கிறது. அதன்படி, நாளை (05) நண்பகல் 12.08 மணியளவில் மொரட்டுவ, கெஸ்பேவ, பொல்கஸ்ஓவிட்ட, ஹந்தபாங்கொட உள்ளிட்ட பல பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலும், காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
இதனால் குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2 முதல் 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.







