மட்டக்களப்பு நெடியமடு பகுதியில் நீர்ப்பாசன திணைக்களம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு நீர் எடுப்பதற்காக வெட்டிய பாதுகாப்பற்ற குழியில் 6 வயதுடைய சிறுவன் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (4) பிற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிசார் தெரிவித்தனர்.
நெடியமடு பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய நாகராசா நவதீப் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள 6ம் கட்டை என அழைக்கப்படும் நெடியமடு பாடசாலைக்கு எதிர்பக்கம் உன்னிச்சைக் குளத்தில் இருந்து வயலுக்கு செல்லும் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு நீர்ப்பாசன திணைக்களம் தண்ணீர் எடுப்பதற்காக குறித்த சிறுவனின் வீட்டு வேலிக்கு அருகில் பாரிய குழி ஒன்றை தோண்டியுள்ளதுடன் அதற்கு பாதுகாப்பு நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் சம்பவ தினமான இன்று பகல் 11.00 மணியளவில் குறித்த சிறுவன் வீட்டின் வேலிக்கு அருகாமையில் நடந்து சென்ற போது வேலிக்கு அருகில் வெட்டிய குழியில் வீழ்ந்ததையடுத்து சிறுவனை மீட்டெடுத்து கரடியனாறு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் எனவும் பாலம் நிர்மாணம் பணியின் போது அங்கு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாததால் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மரண விசாரணை அதிகாரி சென்று விசாரணைகளை மேற்கொண்டு உயிரிழந்த சிறுவனின் உடல் பார்வையிட்டு நீதிமன்ற நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது டன் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஆயித்தியமலை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








