ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் முக்கிய குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிது மலசித குணரத்ன என்ற ‘குடு சலிந்து’விற்கு எதிராகப் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த இரண்டு வழக்கு ஆவணங்கள் காணாமல்போனமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தின் கட்டளைச் சட்டம் மற்றும் அழைப்பாணை பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த அதிகாரி ஒருவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வழக்கு ஆவணங்கள் காணாமல்போனமை தொடர்பில் பாணந்துறை நீதவான் நீதிமன்றப் பதிவாளரால் 1 ஆம் திகதி பாணந்துறை தெற்கு தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ‘பி’ அறிக்கையினூடாக நீதிமன்றத்திற்குத் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டு, பாணந்துறை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
நீதிமன்றப் பதிவாளர் பொலிஸில் முறைப்பாடு செய்த மறுநாளே, அதாவது 2 ஆம் திகதி, சந்தேகத்திற்குரிய குறித்த நீதிமன்ற அதிகாரி தாய்லாந்தின் பாங்கொக் நகருக்குத் தப்பிச் சென்றுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் கடமையாற்றும் சந்தேகத்திற்குரிய 07 பெண் ஊழியர்கள் உட்பட சுமார் 10 பேரிடம் பாணந்துறை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
‘குடு சலிந்து’வின் வழிநடத்தலில் பாணந்துறை வடக்கு பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பான வழக்குக் கோப்பு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டிருந்த வழக்குக் கோப்பு ஆகிய இரண்டுமே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.







