நாட்டில் தொடர்ச்சியான மின்சார விநியோகத்தைப் பேணுவதற்கு தற்போது எந்தவித தடையும் இல்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளுக்குத் தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என அவர் தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்திற்கு விஜயம் செய்திருந்த சந்தர்ப்பத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர், நாட்டின் மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி தொடர்ச்சியாகக் கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
நிலக்கரி கையிருப்பு குறைந்துள்ளதால் நுரைச்சோலை மின்நிலையத்தின் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், தற்போதைய நிலையில் போதுமான நீர்மின் உற்பத்தி இடம்பெறுவதால் மின்சார விநியோகத்தில் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் அமைச்சர் முன்னதாக தெரிவித்திருந்தார்.
மேலும், நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடையும் நிலையில், அவற்றில் இருந்து நிலக்கரி இறக்கப்பட்ட பின்னர் நுரைச்சோலை மின்நிலையத்தின் உற்பத்தியை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, நிலக்கரி பற்றாக்குறை தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டியதில்லை என அமைச்சர் அனுர கருணாதிலக வலியுறுத்தியுள்ளார்.







