பேராதனை போதனா வைத்தியசாலையின் 2027 ஆம் ஆண்டுக்கான சமையலறை உணவுப் பொருட்கள் விநியோக ஒப்பந்தம் தொடர்பாக ரூ.20 லட்சம் இலஞ்சம் கோரி பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவரும் மற்றொரு நபரும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய புலனாய்வு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின்படி, விலைமனு கோரல் அறிவிக்கப்பட்டபோது, முறைப்பாட்டாளரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டாம் எனக் கூறி, ஒப்பந்தத்தைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்து சந்தேகநபர் இலஞ்சம் கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முறைப்பாட்டாளரின் தந்தை மற்றும் மாமாவின் பெயரில் பெறப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காமல் இருக்க முதலில் ரூ.30 லட்சம் இலஞ்சம் கோரப்பட்டதாகவும், பின்னர் அந்தத் தொகை ரூ.25 லட்சமாகவும், இறுதியில் ரூ.20 லட்சமாகவும் குறைக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன்படி, ரூ.20 லட்சம் இலஞ்சத்தைப் பெற்றுக்கொண்டதுடன், அதற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் கம்பளை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரும் மற்றொரு நபரும் நேற்று (27) கம்பளை தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய புலனாய்வு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








