அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், சிறுவர்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (27) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அம்பாறை நோக்கிச் செல்வதற்காக பயணித்த குறித்த முச்சக்கரவண்டியில் இரு சிறுவர்கள் உட்பட 5 பேர் பயணித்துள்ளனர். இதன்போது, சாரதி வழி மாறி பொத்துவில் நோக்கிச் சென்ற நிலையில், விநாயகபுரம் பகுதியில் உள்ள வீதி வளைவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதி பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த தூண் ஒன்றில் மோதியுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், இரு சிறுவர்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் மரண விசாரணைகளுக்காக திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் முச்சக்கரவண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










