நாட்டில் தற்போது எல் நினோ (El Niño) காலநிலை தாக்கம் நிலவினாலும், இதுவரை எந்தப் பகுதியிலும் குடிநீர் விநியோகத்தை கட்டுப்படுத்தும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
சபையின் தலைவர் சந்தன பண்டார கூறுகையில், குடிநீர் உற்பத்திக்கான பிரதான நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகாரசபை இதுவரை நீர் பயன்பாட்டில் எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்காததால், அதிகபட்ச உற்பத்தித் திறனிலேயே நீர் விநியோகம் தொடர்வதாக தெரிவித்துள்ளார்.
எனினும், எதிர்காலத்தில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீர் பயன்பாட்டில் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தும் நிலை ஏற்பட்டால், அப்போது நிலைமையை மதிப்பீடு செய்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புகளின்படி, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் தற்போது வறட்சியான காலநிலை நிலவி வருகிறது. மேலும், எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குப் பின்னரே குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், 2027ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில் வறட்சி நிலைமை மேலும் தீவிரமடையக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்வதற்காக, நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் வசதிகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பல முன்ஆயத்தப் பணிகளில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் நீரை வீணாக்காமல் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துவதுடன், அதிகபட்ச சிக்கனத்துடன் நீரைப் பயன்படுத்துமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.








