இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒருநாள் சேவை கணினி முறைமையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மகேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார்.
இதன்படி, செயலிழந்திருந்த கணினி முறைமை தற்போது வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கணினி முறைமையில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக இன்று காலை வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் பயண ஆவணங்களை விநியோகிக்கும் பணிகளில் தற்காலிகமாக தடங்கல் ஏற்பட்டிருந்தது.
அத்துடன், ஒருநாள் சேவைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளும் இதன் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தன.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக பயண ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டிய பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டிருந்த நிலையில், தற்போது கணினி முறைமை சீரமைக்கப்பட்டுள்ளதால் சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதமும் இதேபோன்று கணினி முறைமையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








