அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர் 40,000 ரூபாய் இலஞ்சப் பணத்தை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் குறித்த கைது நடவடிக்கை நேற்று (10) அக்கரைப்பற்று – சாகாமம் வீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த அதிகாரிகள், திட்டமிட்ட நடவடிக்கையொன்றை முன்னெடுத்து, பணத்தை பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் குறித்த உத்தியோகத்தரை கையும் களவுமாக கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட உத்தியோகத்தர் தற்போது அதிகாரிகளின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்திலுள்ள ஏனைய பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் இடம்பெறுவதாகக் கூறப்படும் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகள் குறித்தும் ஆணைக்குழு தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.








