முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பான விவகாரத்தில் அரசாங்கம் தெளிவானதும் உறுதியானதுமான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஆடை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் சில அரச உத்தியோகத்தர்கள் தேவையற்ற தலையீடுகளை மேற்கொள்வதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஒவ்வொரு சமூகத்தினரதும் சமய மற்றும் கலாசார உரிமைகள் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை பாதுகாப்பது அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பு எனவும் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு மற்றும் உரிய சட்ட விதிமுறைகளை மீறும் அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் அரசாங்கம் தேவையான நடைமுறைகளை அமுல்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சில அரச உத்தியோகத்தர்களின் இவ்வாறான செயற்பாடுகள் சமூகங்களுக்கிடையில் மீண்டும் முரண்பாடுகளையும் பிளவுகளையும் ஏற்படுத்தக்கூடும் எனவும், இது அரசாங்கத்தின் ‘வளமான நாடு’ கொள்கையை கேள்விக்குள்ளாக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் அடிக்கடி எழும் தேவையற்ற தலையீடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்ரான் மஹ்ரூப் மேலும் தெரிவித்துள்ளார்.








