முன்னணி பொருளாதாரக் குறிகாட்டிகள், ஆய்வு முடிவுகள் மற்றும் உத்தியோகபூர்வ மதிப்பீடுகளின் அடிப்படையில், 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சீராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கைத்தொழில் மற்றும் சேவைத் துறைகளின் செயல்திறன் பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமான பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயக் கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்களால் ஏற்படும் பொருளாதார தாக்கங்கள் முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாக இருப்பதால், குறுகிய கால பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் பொதுவாக சாதகமாகவே காணப்படுவதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், உள்நாட்டுத் தேவை படிப்படியாக மேம்படுவதுடன், பேரண்டப் பொருளாதார ஸ்திரத்தன்மையும் தொடரும் பட்சத்தில், மத்திய காலத்தில் பொருளாதார வளர்ச்சி அதன் சாத்தியமான திறனை நோக்கி மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நாணயக் கொள்கை இறுக்கத்தின் தாக்கம் காரணமாக உள்நாட்டுத் தேவையின் அதிகரிப்பு ஓரளவு மந்தமடையக்கூடும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையே, புவிசார் அரசியல் மாற்றங்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருளாதார நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் காலநிலை அபாயங்கள் காரணமாக மத்திய கால பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்புகளில் அதிக நிச்சயமற்ற தன்மை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் மீண்டும் தீவிரமடையும் புவிசார் அரசியல் பதற்றங்கள் உலகளாவிய சக்திவளச் சந்தைகள், வர்த்தகப் பாய்வுகள், விநியோகச் சங்கிலிகள் மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கை ஆகியவற்றில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதன் பக்கவிளைவுகள் இலங்கையின் உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அத்துடன், உலகளாவிய வர்த்தகம் மற்றும் கொள்கை நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், இலங்கையின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளின் பொருளாதார செயல்திறனும் நாட்டின் எதிர்கால வளர்ச்சிப் பாதையை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மீண்டும் மீண்டும் ஏற்படும் பாதகமான காலநிலை மாற்றங்களும் மத்திய மற்றும் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக அமையக்கூடும் என மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
எனவே, நிலையானதும் காலநிலை மாற்றங்களுக்கு மீள்திறன் கொண்டதுமான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கான கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது காணப்படும் பொருளாதார வளர்ச்சி வேகத்தை தொடர்ந்து பேணுவதற்கு, இலக்கு வைக்கப்பட்ட கட்டமைப்புச் சீர்திருத்தங்களையும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மூலோபாயங்களையும் உரிய காலத்தில் திறம்பட நடைமுறைப்படுத்துவது முக்கியமானது என இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.







