இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் சான்றிதழ் பிரிவின் கணனி தரவுக் கட்டமைப்பு திடீரென செயலிழந்துள்ளதால், விண்ணப்பதாரர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வதைத் தவிர்க்கும் வகையில் தற்காலிக மாற்று வழிமுறையொன்றைப் பொலிஸ் ஊடகப் பிரிவு அவசரமாக அறிவித்துள்ளது.
பத்தரமுல்ல, சுஹுருபாய கட்டடத்தின் 17 ஆவது மாடியில் அமைந்துள்ள பொலிஸ் சான்றிதழ் பிரிவின் கணனி தரவுக் கட்டமைப்பு கடந்த (20) நண்பகல் முதல் தற்காலிகமாகச் செயலிழந்துள்ளது.
இந்தத் தரவுக் கட்டமைப்பானது வழமையாக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல், பின்னணி அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் சான்றிதழ்களை வழங்குதல் போன்ற அனைத்துப் பணிகளையும் கணனிமயப்படுத்தப்பட்ட முறையில் ஒருங்கிணைத்து செயற்படுத்தும் அமைப்பாகும்..
இந்தக் கணனி கட்டமைப்பு மீண்டும் சீரமைக்கப்படும் வரை, பொதுமக்கள் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காகப் புதிய தற்காலிக நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, விண்ணப்பதாரர்கள் இலங்கை பொலிஸின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.police.lk என்ற முகவரிக்குச் சென்று, விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் (Download Application) செய்துகொள்ள வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட அந்த விண்ணப்பப் படிவத்துடன் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு ஆகியவற்றின் நிழற்படப் பிரதிகளை (Photocopies) இணைத்து, *clear.application@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு தற்காலிக முறையில் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களை அடிப்படையாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்கள் ஊடாக பின்னணி அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ளப் பொலிஸ் சான்றிதழ் பிரிவு உடனடியாக நடவடிக்கை எடுக்கும். கணனி கட்டமைப்பு வழமைக்குத் திரும்பியதும் அதற்கேற்ப சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்தத் தற்காலிக கட்டத்தில் விண்ணப்பதாரர்கள் எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. இருப்பினும், இந்தக் காலப்பகுதியில் தற்காலிகமாக விண்ணப்பிக்கும் அனைவரும், கணனி கட்டமைப்பு சீரானதும் மீண்டும் ஆன்லைன் (Online) முறைமை ஊடாக உரிய கட்டணங்களைச் செலுத்தி, தங்களது விண்ணப்பங்களை மறுசமர்ப்பீடு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏற்கனவே விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, சான்றிதழ்கள் அச்சிடத் தயாராக உள்ளவர்களின் விபரங்கள் மற்றும் குறிப்பு எண்கள் (Reference Numbers) பொலிஸ் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றப்படும். அவ்வாறு குறிப்பு எண்கள் வெளியிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் மாத்திரம் பத்தரமுல்ல, சுஹුරුபாய கட்டிடத்தின் 17 ஆவது மாடியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று தமது சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பொதுமக்கள் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த அலுவலகத்திற்குச் சென்று சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இணையத்தளத்தில் குறிப்பு எண்கள் வெளியிடப்படாத ஏனைய விண்ணப்பதாரர்களுக்கு, கணனி கட்டமைப்பு முழுமையாகச் சீரமைக்கப்பட்ட பின்னரே சான்றிதழ்கள் வழங்கப்படும்.
கணனி கட்டமைப்பை மிக விரைவில் மீட்டெடுப்பதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அது மீண்டும் முழுமையாகச் செயற்படத் தொடங்கியவுடன் அது பற்றிய விபரங்கள் பொதுமக்களுக்கு உடனடியாக அறிவிக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







