யாழ்ப்பாணம், வடமராட்சி துன்னாலை காட்டு பகுதியில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்றை பொலிஸார் முற்றுகையிட்டதுடன், இருவரை கைது செய்துள்ளனர்.
குறித்த பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி இடம்பெற்று வருவதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸார் இன்று விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, அங்கிருந்த சிலர் தப்பியோடிய நிலையில், இருவரை பொலிஸார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.
சோதனை நடவடிக்கையின்போது 20 லீற்றர் சட்டவிரோத மதுபானம், 540 லீற்றர் கோடா, மதுபான உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இருவரும், மீட்கப்பட்ட பொருட்களுடன் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தப்பியோடிய ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








