சிங்கப்பூர் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட சரக்கு கப்பலொன்று, ஒடிஷாவின் பாரதீப் துறைமுகம் அருகே வங்கக்கடலில் மூழ்கியதில் 22 கப்பல் பணியாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரும்புத் தாது ஏற்றிக்கொண்டு பாரதீப் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே குறித்த கப்பல் கடலில் மூழ்கத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
கப்பலில் சீனாவைச் சேர்ந்த 20 பேரும், மியான்மரைச் சேர்ந்த மூவரும், வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவருமாக மொத்தம் 24 பணியாளர்கள் பயணித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் இந்திய கடலோரக் காவல்படையினரும் கடற்படையினரும் இணைந்து தீவிர மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, கப்பலில் இருந்த இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய 22 பேர் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. அப்பகுதி வழியாகச் செல்லும் ஏனைய கப்பல்களும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.







