திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் ‘Voice to Policy’ கலந்துரையாடல் தொடரின் இரண்டாவது நிகழ்வு எதிர்வரும் ஓகஸ்ட் 29ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு East Lagoon ஹோட்டலில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு, இளைஞர்களிடையே திறந்த பாராளுமன்ற எண்ணக்கருவை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள் இதில் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பாராளுமன்றத்தின் செயற்பாடுகள், சட்டவாக்கச் செயன்முறை மற்றும் திறந்த பாராளுமன்றக் கொள்கைகள் தொடர்பில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், பாராளுமன்றத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
நிகழ்வில் கலந்துகொள்ள விரும்புவோர் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தின் ஊடாக முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பங்கேற்பாளர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அமைப்பையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அடையாளங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.










